ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த திட்டத்தை...
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்ற பெயரில் அரசு அறிமுகப்படுத்தி விவசாயப்பொருளாதாரத்தை சிதைக்கிறது என கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது வறட்சிகாலங்களில் வேலை வாய்ப்புகளை தருவதற்காக கொண்டுவந்த திட்டம் பஞ்சநிவாரண திட்டம். இந்த திட்டம் தற்போது சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லதிட்டமான இதன் நோக்கமும் , நடைமுறையும் வேறுபட்டு இருக்கிறது. ரூ40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுவருகிறது.
இந்த நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தினால் விவசாய வேலைகள் முடங்கிபோயுள்ளதால், தரிசு நிலத்தின் பரப்பளவு கூடிக்கொண்டே செல்கிறது. விவாசய வேலைகளில் ஈடுபட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய வேலையில் ஈடுபட்டிருப்போரை அரசே முன் நின்று ஆசைகாட்டி மோசம் செய்கிறது.
இது விவசாய விரோதப்போக்காகும். நாட்டின் முன்னேற்றப்பாதையில் முட்டுக்கட்டை போடுவது நியாயமா? ஓட்டுக்களை பெறுவதற்கு இதுவா வழி? இந்த திட்டம் கிராமங்களில் லஞ்சத்தையும், ஊழலையும், முறைகேடுகளையும், ஒழுங்கீனங்களையும் விதைக்கிறது.
இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கூலியின் ஒரு பகுதியை அரசு அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த திட்டத்தில் மலிந்திருக்கும், ஊழலுக்கும்,லஞ்சத்திற்கும், முறைகேடுகளுக்கும் அளவே இல்லை.
தற்போதைய விலைவாசி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்த திட்டம் தேர்தல்கால லஞ்ச நிவாரண திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பணியாளர்களை வேளாண் பணிகளுக்கு த்திருப்பி விடவேண்டும். முடியாவிட்டால் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த குறிப்பில் குறிபிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக