சிவகிரி அருகே கிராம மக்கள் மழைவேண்டி
ஒப்பாரி வைத்து அழுதனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்டது மாரப்பம்பாளையம் கிராமம்.
இந்த கிராம த்தைச்சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் என பல தரப்பு
மக்களும்நேற்று மாலையில் கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் ஒன்றுகூடினர்.
மழை பொய்துப்போயுள்ளதையும், அதனால் வரப்போகும் பஞ்சத்தை பற்றியும் ஒருவருக்கு ஒருவர்
கருத்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
வரப்போகும் பஞ்சத்தை தவிர்க்க வேண்டியும் மழை பெய்யவேண்டியும்
வருணபகவானின் கருணை வேண்டியும்
ஒவ்வொருவர் வீடுகளிலும் இருக்கும் உணவு
தானியங்களை பெற்று கூழ் காய்ச்சி கும்பிடுவது என முடிவு செய்தனர்.
இந்த முடிவின்படி
கிராமத்தில் வசிப்போர் வீடுகளிலிருந்து பெறப்பட்ட உணவு தானியங்களை ஒன்று சேர்த்து
கோயிலில் புதுப்பானையில் அதனை இட்டு கூழாக காய்ச்சினர்.
இந்தக்கூழை சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ஒன்றாக பெற்று அருந்தினர்.
பின்னர் ஊர் தெய்வங்களிடம் மழைவேண்டி பிரார்த்தனை
செய்துவிட்டு மழைபெய்யாவிட்டால் ஊரில் இருக்க மாட்டோம் என்று சொல்லியபடியே ஊர் எல்லைக்கு அழுதுகொண்டே சென்றனர்.
ஊர் எல்லைக்கு சென்றவுடன் சென்றவர்கள் அனைவரும் கும்மியடிப்பதுபோல வட்டமிட்டு ஒன்று கூடினர். வட்டத்தின் நடுவில் மூங்கிலால் செய்யப்பட்ட
கூடையையும், முறத்தையும் வைத்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக்கொண்டு மழைபெய்யவேண்டி ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.
இப்படி அழுதுகொண்டு நின்றவர்களை சமாதானப்படுத்தும் விதமாக ஊர் பெரியவர்களும், கோயில் பூசாரியும் அங்கு வந்து சமாதானப்படுத்தினர்.
மழைவரும் என்பதற்கு அறிகுறியாக கோயில் பூசாரி தன்னுடன் கொண்டு வந்திருந்த சொம்பிலிருந்த தீர்த்தத்தை அனைவர் மீதும் படும் படியாக தெளித்தார்.
இதனால் சமாதானம் அடைந்த பெண்கள் ஊருக்குள் திரும்பி சென்றனர்.
இப்படியான நிகழ்வுகளை நடத்தினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரும் தென்மேற்கு
பருவமழை பொய்த்துபோனபோது கடும் வறட்சி தமிழகத்தில் நிலவியது.
அப்போது இதேபோன்ற காட்சிகள் கிராமங்கள் தோறும் மக்களால் நிகழ்த்தப்பட்டன.
அந்த நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறுவதற்கு தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக